திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பணம் திருடியதாக 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (29). இவர், ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் தண்டராம்பட்டு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் காத்திருந்தார். அப்போது அவரை உரசியபடி இளைஞர் ஒருவர் சென்றார். சந்தேகமடைந்த யுவராஜ், தனது பாக்கெட்டைப் பார்த்தபோது அதில் இருந்த ரூ.500-ஐ காணவில்லையாம்.
சந்தேகமடைந்த யுவராஜ், உரசிச் சென்ற இளைஞரைப் பிடித்து பார்த்தபோது அவரது பாக்கெட்டில் ரூ.500 இருந்ததாம். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அவரை
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் திருவண்ணாமலை, எள்ளுக்குட்டை தெருவைச் சேர்ந்த ஹாஜி (27) என்பது தெரியவந்தது.
இதேபோல, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த திருவண்ணாமலை பே கோபுரம் 5 ஆவது தெருவைச் சேர்ந்த ராஜாவின் பாக்கெட்டில் இருந்து திருவண்ணாமலையை அடுத்த சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வசந்த் (22) என்பவர் ரூ.500-ஐ திருடினாராம். இவ்விரு சம்பவங்கள் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ஹாஜி, வசந்த் ஆகியோரை கைதுசெய்தனர்.