ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் எல்லையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடி வெள்ளி விழாவில் தமிழக இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.
ஆரணி அருகேயுள்ள பூசிமலைக்குப்பம் கிராமத்தில் தேவி ஸ்ரீஎல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 6-ஆம் ஆண்டு ஆடி மாத 3-ஆம் வெள்ளி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கிராம மக்கள் 108 பால் குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் விழா நடைபெற்றது. சனிக்கிழமை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை எல்லையம்மனுக்கு சிறப்பு கலச யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலை கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், ஊர்மக்கள் கூடி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.
கோயில் விழாக் குழுவினர் அவரை கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர், அமைச்சர் கோயிலில் நடைபெற்ற யாக பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதிமுக ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.