வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 42-ஆம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை கோ மாதா பூஜை, கணபதி ஹோமம், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு பல்வேறு வண்ண வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் ப.மச்சேந்திரன், கோயில் நிர்வாகி சிவா மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.