அருணாசலேஸ்வரர் கோயில் அருகே கட்டடம் இடிந்து விழுந்து பெண் காயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தார்.
அருணாசலேஸ்வரர் கோயில் திருமஞ்சன கோபுரம் அருகே காதி கிராப்ட் கடையும், கதர் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநர் அலுவலகமும் இயங்கி வந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு காதி கிராப்ட் கடை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
அதனால், கடை செயல்பட்டு வந்த அறையை சீரமைக்கும் பணி சில தினங்களாக நடைபெற்று வருகிறது, வழக்கம்போல திங்கள்கிழமை தொழிலாளர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 6 மணியளவில் திடீரென கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்தது. இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காயமடைந்தார்.
தகவலறிந்த திருவண்ணாமலை நகர போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இயந்திரங்ளைக் கொண்டு சுவர்களை துளையிடும்போது ஏற்பட்ட அதிர்வில் கட்டடம் இடிந்து விழுந்தது தெரியவந்தது.