கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மண்டலப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வோர் ஆண்டும் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் குழுவினரால் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான மண்டலப் பயிற்சி முகாம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் காத்தவராயன் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ்.சுகுமாரன், டி.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் எ.முருகன் வரவேற்றார்.
மாநிலச் செயலர் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், இயக்கப் பொறுப்பாளர்கள் நாராயணன், ரேணுகோபால், கோவிந்தராஜ், மாவட்ட இணைச் செயலர் ஏ.வி.சீனுவாசன் உள்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.