திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.6.69 கோடியில் அமைக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
இதையொட்டி, விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு செயற்கை இழை ஓடுதளத்தை மாணவர்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.6.69 கோடி செலவில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல் தரை கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, ஊட்டி ஆகிய இடங்களில் மட்டுமே செயற்கை இழை ஓடுதளம் உள்ளது.
தற்போது, திருவண்ணாமலையிலும் செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்தரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓடுதளத்தை புதன்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் சென்னையில் இருந்தவாறு திறந்து வைத்தார்.
இதையொட்டி, திருவண்ணாமலையில் விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு செயற்கை இழை ஓடு
தளத்தை மாணவர்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைத்தார்.
இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் மோகன், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் நான்சி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம், வட்டாட்சியர் கே.அமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கலை, பண்பாட்டுத் துறை சார்பில் ரூ.85 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாவட்ட அரசு இசைப் பள்ளியை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார். இதையொட்டி, மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு மாணவர்கள் தவில் இசைப்பதை பார்வையிட்டார்.
இதில், மாவட்ட அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர்
(பொறுப்பு) ரவிசங்கர், வட்டாட்சியர் கே.அமல், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையர் தி.அண்ணாதுரை, தனிஅலுவலர் ப.பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் ரூபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.