தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற ஆக.31-ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம், கட்டடத்துக்கான நீல வரைபடம், கட்டடம் சொந்தமாக இருப்பின் அதற்குரிய ஆவணம், வாடகையாக இருப்பின் அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிம கட்டணம் ரூ.500-ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், இருப்பிட ஆதாரம், விண்ணப்பதாரரின் மார்பு அளவுள்ள 2 புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பித்தால், ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும், நிரந்தர பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது எனத் தெரிவித்தார்.