செய்யாறு அருகே 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன விவசாயி, பெண்ணுடன் விஷம் அருந்திய நிலையில் புதன்கிழமை இருவரும் சடலமாகக் கிடந்தனர்.
செய்யாறு வட்டம், கோவிலூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இளம்பெண் மற்றும் இளைஞரின் சடலங்கள் கிடந்தன. அருகில் விஷம், மதுபானப் புட்டி, குளிர்பானம் ஆகியவை இருந்தன.
புதன்கிழமை காலை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அனக்காவூர் காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விளாரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், மனைவி அகிலா (23), சுரேஷின் தம்பி ஐயப்பன் (26) என்பதும் தெரிய வந்தது.
மேலும், சுரேஷ், தனது மனைவி அகிலா மற்றும் தம்பியைக் காணவில்லை என்று கடந்த மே 5-ஆம் தேதி அனக்காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்தது.
அனக்காவூர் போலீஸார் நடத்திய விசாரணையில் அகிலாவுக்கும், ஐயப்பனுக்கும் தகாத உறவு இருந்ததும், இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் இருவரும் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். ஆனால், தங்கள் உறவினர்கள் தகராறு செய்வார்கள் எனக் கருதிய நிலையில், இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இருவரது தற்கொலை குறித்து சுரேஷின் அண்ணன்
முருகன் அனக்காவூர் போலீஸில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் ராஜ்ஜெய்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.