செய்யாறு அரசு மருத்துவமனையில் மது போதையில் கத்தியுடன் தராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் வந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது பணியிலிருந்த செவிலியர்கள், நோயாளிகள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக செய்யாறு காவல் நிலையத்துக்கு
தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் வருவதற்குள் மருத்துவமனை காவலாளிகள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து வைத்திருந்தனர். பின்னர், போலீஸார் வந்தவுடன் அவர்களிடம் இளைஞரை ஒப்படைத்தனர்
விசாரணையில், தகராறில் ஈடுபட்ட இளைஞர் அனப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (35) என்பதும், கட்டுமானப் பணி செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், அனப்பத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் இவரால் தாக்கப்பட்ட மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. அவரை பின்தொடர்ந்து வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவமனை செவிலியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.