ஏரிக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் ஆய்வு
செங்கம் அருகே பரமனந்தல் ஏரிக்கு வரும் கல்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
செங்கத்தை அடுத்த குப்பனத்தம் அணை அருகில் பரமனந்தல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு குப்பனத்தம் அணையில் இருந்து வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ஏரி வறண்டு காணப்படுகிறது.
இந்த ஏரிக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட அதிமுக துணைச் செயலர் அமுதாஅருணாச்சலத்திடம் அந்தப் பகுதி மக்கள் முறையிட்டனர்.
அதன் அடிப்படையில், செங்கம் பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் ராஜாராமன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமுதாஅருணாச்சலம் பரமனந்தல் ஏரிக்கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
அப்போது, கால்வாய்களை அளவீடு செய்து, அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். உடன், அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.