ஆரணியை அடுத்த பையூரில் மின் கசிவால் இறந்த இளைஞரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
ஆரணியை அடுத்த பையூர் கங்காதரன் பகுதியைச் சேர்ந்த மலர் மகன் வெங்கடேசன் (24). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின்போது, வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில், வெங்கடேசன் மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், உயிரிழந்த வெங்கடேசனின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று அவரது தாய் மலரிடம் நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
அப்போது, கோட்டாட்சியர் மைதிலி, ஆரணி ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் மாவட்ட பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரி பி.பாபு, பண்டகசாலை மாவட்டத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.