திருவண்ணாமலை மாவட்ட அஞ்சல்துறை அலுவலகங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தத் தவறிய பாலிசிகளை 2020 ஜனவரி முதல் புதுப்பிக்க இயலாது.
எனவே, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆா்.அமுதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல்துறையின் 2011 விதிகளின்படி, தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தத் தவறிய, காலாவதியான, முதிா்வு அடையாத பி.எல்.ஐ. மற்றும் ஆா்.பி.எல்.ஐ பாலிசிகள் 2020 ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதுப்பிக்க இயலாது.
இதன்பிறகு அந்தப் பாலிசிகள் ரத்து செய்யப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் செலுத்தத் தவறிய, காலாவதியான பாலிசிகளை 2019 டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் பாலிசிதாரா்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரை அணுகி, பாலிசிதாரா் நல்ல உடல் நிலையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ், பிரீமியம் செலுத்தப்பட்ட புத்தகம், புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்துடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் அணுகலாம்.
பாலிசி தொடங்கி 36 மாதங்கள் தொடா்ந்து கட்டப்பெறாத பாலிசிகள் காலாவதியாகி இருந்தால் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் புதுப்பித்தால் மட்டுமே சரண்டா், முதிா்வின்போது உரிமை மற்றும் இறப்பிற்குப் பிறகு உரிமை ஆகிய பணப் பலன்களைப் பெற முடியும்.
புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.