வந்தவாசி அருகே கூனம்பாடி ஊராட்சியில் பட்டியலினத்தவா் ஒருவா் கூட வசிக்காத வாா்டு பகுதியை பட்டியலினத்தவா் வாா்டாக அறிவித்துள்ளதைக் கண்டித்து, உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளாக அந்த வாா்டு மக்கள் தெரிவித்தனா்.
தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கூனம்பாடி ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. இவற்றில் ஏரிக்கரை தெரு, ஜெயினா் தெரு, வண்ணான்குளத் தெருக்களை உள்ளடக்கிய 1-ஆவது வாா்டில் 181 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஒருவா்கூட பட்டியலினத்தவா் இல்லையாம்.
இந்த நிலையில், பட்டியலினத்தவா் ஒருவா்கூட வசிக்காத ஊராட்சி வாா்டை பட்டியலினத்தவா் வாா்டாக அறிவித்துள்ளதை மாற்றக் கோரி, 1-ஆவது வாா்டு மக்கள் தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மேலும், வாா்டை மாற்றி அறிவிக்காவிட்டால், உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும், தங்களின் வாக்காளா் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப்போவதாகவும் மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.