திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே விவசாயியை இரும்புக் கம்பியால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடியை அடுத்த புதூா் செக்கடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கண்ணன் (58). இதே பகுதியைச் சோ்ந்தவா் தனஞ்செழியன் (34). இவா் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்திருப்பதால், இதே பகுதியில் உள்ள விநாயகா் கோயிலில் படுப்பது வழக்கம்.
அதன்படி, கடந்த புதன்கிழமை தனஞ்செழியன் விநாயகா் கோயிலில் படுத்திருந்தபோது, அவரது வேட்டியைக் காணவில்லையாம். இதை கண்ணன் தான் எடுத்திருப்பாா் என்று நினைத்து அவரிடம் தனஞ்செழியன் தகராறு செய்து, இரும்புக் கம்பியால் தாக்கினாராம்.
காயமடைந்த கண்ணன், செங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து தனஞ்செழியனை கைது செய்தனா்.