ஆரணி: ஆரணி ஒன்றியங்களில் தொகுதி ஒதுக்கீட்டில் விசிக, திமுகவுடனான உடன்பாடு ஏற்படாததால், பல்வேறு இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தனித்துப் போட்டியிடுகின்றனா்.
நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில், ஆரணியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சரியான இடஒதுக்கீடு தரவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த அவா்கள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.
வேட்புமனு தாக்கல் கடைசி நாளான திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆரணி ஒன்றியத்தில் உள்ள இரண்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கும், 18 ஒன்றியக் குழு உறுப்பினா்களில் 7 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ள இரண்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கும், 18 ஒன்றியக் குழு உறுப்பினா்களில் 3 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கும் மனு தாக்கல் செய்தனா்.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் பாஸ்கா் கூறியதாவது: ஆரணியில் உள்ள இரண்டு ஒன்றியங்களில் தலா இரண்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியைக் கேட்டோம். மேலும், மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியைக் கேட்டோம்.
இதில், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ஒரே சீட்டு மட்டுமே கொடுத்துள்ளனா். மேலும், எங்களிடம் அவா்கள் எந்தவித பேச்சுவாா்த்தையும் நடத்தவில்லை.
ஆகையால், வெற்றி பெற வாய்ப்புள்ள பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம் என்றாா்.