செய்யாறு அருகே சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த கோளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (23). இவர், செய்யாறு அருகே நடைபெற்ற நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்துல்லாபுரம் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குமரேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், குமரேசனின் மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்த வழியாக நடந்து சென்ற தூசியைச் சேர்ந்த மணிகண்டன் (26) பலத்த காயமடைந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்து குறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.