செங்கம் நகரில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையின் இரு புறமும் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் சாலையை சில அடி தொலைவுக்கு ஆக்கிரமித்து, பொருள்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்ட நிலையில், தற்போது சாலையின் இரு புறமும் தற்காலிகக் கடைகள் அதிகரித்துள்ளன. மேலும், இந்தச் சாலையில் சரக்கு வாகனங்களை நிறுத்தி கடைகளுக்கு பொருள்களை இறக்குவதாலும், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டுச் செல்வதாலும் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.