வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேட்டவலம் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்ட விழிப்புணர்வுப் பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தின.
வேட்டவலம் காந்தி சிலை எதிரில் இருந்து புறப்பட்ட பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
மாட வீதிகள் உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, மீண்டும் காந்தி சிலையில் நிறைவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண் குழந்தைத் திருமணத்தை தடை செய்ய வேண்டும். பெண் சிசு கருக்கலைப்பு செய்யக்கூடாது.
பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், முழக்கங்களை எழுப்பியபடியும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில், வேட்டவலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, புனித அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அன்னை நைட்டிங்கேல் அம்மையார் நர்சிங் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் உமா, நடமாடும் மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன், அன்னை நைட்டிங்கேல் அம்மையார் நர்சிங் கல்லூரி முதல்வர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.