ஆரணியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணுபிரசாத் ஆதரவாளரான மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமையில் ஒரு பிரிவாகவும், முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்தராஜ் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
ஆரணி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் சாவி முன்னாள் மாவட்டத் தலைவர் வசந்தராஜ் பிரிவினரிடம் உள்ளது. இந்த நிலையில், விஷ்ணுபிரசாத் ஆதரவாளரான நகரத் தலைவர் ஜெயவேல்
தலைமையில் திடீரென செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சி அலுவலகத்தின் சாவியை உடனடியாக மற்றொரு பிரிவினரிடமிருந்து பெறுவது. கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமையிடம் புகார் அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் அருணகிரி, மாவட்டப் பொருளாளர் பிரசாத், வட்டாரத் தலைவர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.