மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
திருவண்ணாமலை அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (43). இவர், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். திங்கள்கிழமை அலுவலகப் பணியை முடித்துவிட்டு மொபெட்டில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் புனல்காடு பகுதியில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், மொபெட்டை கடந்து செல்வதுபோல அருகே சென்று கவிதா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா, கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.