திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், கல்விப்புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவரும், வேலைவாய்ப்பு அலுவலருமான எம்.கோபு வரவேற்றார். முகாமில், சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களைச் சேர்ந்த 23 முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்தனர்.
இதில், மொத்தம் 1,535 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் விரைவில் வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. நிகழ்ச்சியில், கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர்
கு.ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.