திருவண்ணாமலை மாவட்ட தேசிய பசுமைப் படை சார்பில், கடந்த 19-ஆம் தேதி மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 32 மாணவ, மாணவிகளை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைபபாளர் கார்த்திகேயன் தலைமையில், சனிக்கிழமை சாத்தனூர் அணைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா, ஆல்காக்கள் பூக்கள், முதலைப் பண்ணை, மீன் பண்ணை, நீச்சல்குளம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடன் ஆசிரியர்கள் பிரம்மானந்தம், வேடந்தமதி, பன்னீர்செல்வம், கதிரவன், காமராஜ், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.