போளூரில் உள்ள சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட இரும்பாலான சாலைத் தடுப்புக் கட்டைகளில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சின்னராஜ் வெள்ளிக்கிழமை ஒட்டினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் பேருந்துகள், கார் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போளூரில் உள்ள சித்தூர் - கடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சாலையை பிரித்துக் காட்டவும் 10-க்கும் மேற்பட்ட இரும்பு சாலைத் தடுப்புக் கட்டைகள் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் வசூர் - செங்கம் சாலை, திருவண்ணாமலை சாலை, போளூர் நகர் செல்லும் சாலை உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த இரும்பாலானத் சாலை தடுப்புக் கட்டைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், இவற்றில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.சின்னராஜ் ஒட்டினார். அப்போது, காவல் ஆய்வாளர் என்.சுரேஷ்பாபு, காவல் உதவி ஆய்வாளர் என்.தயாளன் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.