திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 166 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளின் குறைகள், கோரிக்கைகளை அவ்வப்போது கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. அதன்படி, சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 166 மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.