ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் இருந்து 7 வழித்தடங்களில் 7 புதிய அரசுப் பேருந்துகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.140 கோடியில் 555 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் திருவண்ணாமலை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 15 பேருந்துகள் வழங்கப்பட்டன.
இவற்றில், ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் இருந்து 7 வழித்தடங்களில் 7 புதிய அரசுப் பேருந்துகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வந்தவாசி பணிமனை - 1 சார்பில், திருவண்ணாமலையிலிருந்து வந்தவாசி வழியாக சென்னை வழித்தடத்திலும், வந்தவாசி பணிமனை - 2 சார்பில், காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக சேலம் வழித்தடத்திலும் 2 புதிய பேருந்துகளை தொடக்கிவைக்கும் விழா வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து 2 புதிய பேருந்துகளையும் தொடக்கிவைத்தார்.
விழாவில், வந்தவாசி வட்டாட்சியர் ஆர்.அரிக்குமார், அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, பேரவை மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தர்மதுரை, பேரவை ஒன்றியச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரணி: இதேபோல, ஆரணியிலிருந்து ஆரணி - கோயம்புத்தூர், ஆரணி - 12புத்தூர் - சென்னை, போளூர் - சேலம் ஆகிய வழித்தடங்களில் 3 புதிய அரசுப் பேருந்துகளை கொடியசைத்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தார்.
விழாவில் திருவண்ணாமலை தொகுதி எம்.பி. ஆர்.வனரோஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெமினிஇராமச்சந்திரன், எ.கே.அரங்கநாதன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகரச் செயலர் எ.அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பிஆர்ஜி.
சேகர், எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு: செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் - செய்யாறு - சேலம் வழித்தடத்தில் 2 புதிய அரசுப் பேருந்துகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
விழாவில், திருவண்ணமலை மண்டல பொது மேலாளர் க.வெங்கிடேசன், திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லிபாபு, வட்டாட்சியர் க.மகேந்திரமணி, கிளை மேலாளர் விநாயகம், திருவண்ணாமலை மண்டல துணை மேலாளர் கா.செல்வகுமார், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மகேந்திரன், ரவி, ஜெனார்த்தனம், அருணகிரி, சி.துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.