திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சுகாதார பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, திருவண்ணாமலை கோட்டாட்சியர் (பொ) உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.குமாரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜி.அரவிந்த் மற்றும் தூய்மைக் காவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பாக 2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரம், திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழித்திடும் வகையில் சுகாதார பொங்கல் விழாவாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தூய்மைக் காவலர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, பூ அலங்காரம் செய்யப்பட்டு, கோலம் போடப்பட்டு, பானை, கரும்பு, செங்கல் அடுப்பு, விறகுகள் மூலம் பொங்கல் வைத்து, பாக்குமட்டை, வாழை இலைகளில் பரிமாறப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தூய்மைக் காவலர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு சணல் பைகள் வழங்கினார்.
மேலும், தமிழக அரசு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர், உதவிச் செயற்பொறியாளர்களுக்கு (திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், சாலைகள், பாலங்கள்) வழங்கப்பட்டுள்ள 5 ஜீப்புகளுக்கான சாவிகளை வாகன ஓட்டுநர்களிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.