திருவண்ணாமலை அருகே கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை நகரப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை 100 அடி நெடுஞ்சாலையில் சென்றபோது, போலீஸாரைப் பார்த்ததும் 5 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட முயன்றது. இதையடுத்து, போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் திருவண்ணாமலையை அடுத்த நாவக்கரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (25), பரத் (23), ராம்ஜி நகரைச் சேர்ந்த சுரேந்தர் (22), அண்ணா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (21), சிவசக்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (19) என்பதும், இவர்கள் அனைவரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.