வேட்டவலம் ஜமீன் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் 26-ஆவது ஆண்டு தேர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் பூஜை, 7 மணிக்கு ஸ்ரீசக்திவேலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிங்காரவேல் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுன.
காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசிங்காரவேல் முருகன், ஸ்ரீவிநாயகர் சுவாமிகள் எழுந்தருளி மாட வீதிகளை வலம் வந்தனர்.
வேட்டவலம் ஜமீன், தேரை வடம் பிடித்து இழுத்து, தேர்த் திருவிழாவை தொடக்கிவைத்தார்.
காவடியாட்டம், புஷ்ப ரதம், அலகுத்தேர் புடைசூழ வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் வீதியுலா வந்த தேர், இறுதியாக சந்நிதியை வந்தடைந்தது.
விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோயில் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உத்ஸவர் ஸ்ரீசிங்காரவேல் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேர்த் திருவிழாவில், கோயில் நிர்வாக அறங்காவலர் சே.பரசுராமன் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.