ஆரணியை அடுத்த சேவூரில் அரசு தொடக்கப் பள்ளியில் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
சேவூர் அரசு தொடக்கப் பள்ளியில் பயின்ற பிரபல தொழிலதிபர் பன்னீர்செல்வம் மறைந்ததன் நினைவாக அவரது மகன் சீனிவாசன் ரூ. 4 லட்சம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க முன்வந்தார். இதையடுத்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணியை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது, அவர் வகுப்பில் உள்ள புரொஜக்டர் மூலம் பாடம் நடத்தபடும் வசதி கொண்ட கணினியை இயக்கிவைத்தார்.
நிகழ்வின் போது, ஆரணி ஒன்றிய அதிமுக கழக செயலர் பிஆர்ஜி.சேகர், வேலூர் மாவட்ட பால் கூட்டுறவுச் சங்கத் துணைத் தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பாசறை செயலர் ஜி.வி.கஜேந்திரன், ஆரணி பட்டுக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், கழக கிளைச் செயலர் பாலசந்தர், பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி, ஆசிரியர் லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.