வந்தவாசி அருகே தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொன்னூரில் ரூ. ஒரு கோடியில் 49 இருளர் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொன்னூர் ஊராட்சியில் கடந்த 1987-இல் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடுகளில் 49 இருளர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அந்த வீடுகள் சேதமடைந்ததை அடுத்து, வீடுகளுக்கு அருகிலேயே குடிசை கட்டி, அதில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த இருளர் குடியிருப்பில் உள்ள சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அகற்றிவிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பழங்குடியினர் நலத் துறை உள்ளிட்டவை சார்பில், ரூ. ஒரு கோடியில் 49 புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன. மேலும், தார்ச்சாலை, மின் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, வீடுகள் கட்டும் பணியை தொடக்கிவைத்தார். மேலும், அந்த குடியிருப்பில் செயல்பட்டு வரும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ஆர்.ரங்கநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் எம்.சுவாமிநாதன், உதவிச் செயற்பொறியாளர் சபாநாயகம், தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.