அரசு இசைப் பள்ளி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு 

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 2019 - 20ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
 இந்தப் பள்ளியில் குரலிசை, நாகஸ்வரம், தவில், தேவாரம், பரதம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட 3 ஆண்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் 13 முதல் 25 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் சேரலாம்.
 நாகஸ்வரம், தவில் பயிற்சியில் சேருவதற்கு எழுதப், படிக்கத் தெரிந்திருந்தால் போதும். பிற பயிற்சிகளுக்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பயிற்சிக்குப் பிறகு அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.400 உதவித்தொகை, இலவச பேருந்துப் பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.
 பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் திருவண்ணாமலை, பவளக்குன்று மடாலயத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு தங்களது பள்ளி மாற்றுச்சான்று, வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றின் நகல்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேரலாம்.
 மேலும், விவரங்களுக்கு 04175 223545 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு இசைப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com