செய்யாறை அடுத்த பாராசூர் அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியையைக் கண்டித்து, அந்தப் பள்ளி மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு வட்டம், பாராசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக இருந்தபோது பணியாற்றிய தமிழ் ஆசிரியை ராதா, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது, தொடக்கப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு பணியிடம் மாற்றப்பட்டு, கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகத் தெரிகிறது.
இவர், கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்துவதில்லை என்று மாணவர்களின் பெற்றோரும், அந்தக் கிராம மக்களும் கல்வித் துறைக்கு புகார் தெரிவித்துள்ளனராம்.
மேலும், ஆசிரியை ராதா பாட வேளைகளில் முறையாக தமிழ்ப் பாடம் நடத்துவதில்லையாம். நிகழ் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு உள்பட சில வகுப்புகளுக்கு தமிழ்ப் பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பள்ளி தொடங்கி ஒரு மாதம் கடந்தும் அவர் தமிழ்ப் பாடம் நடத்தவில்லை என மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த நிலையில், முறையாக பாடம் நடத்தாத தமிழ் ஆசிரியை ராதாவைக் கண்டித்து, பாராசூர் அரசு உயர்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர்கள் புதன்கிழமை பள்ளியின் எதிரே செய்யாறு - பெரணமல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்கள் வாக்குறுதி அளித்ததால், மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டு வகுப்பறைகளுக்குச் சென்றனர்.
மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.