திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்தம் வாரிசுகளின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையிலான குறைதீர் கூட்டமும், முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கமும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றன.
கருத்தரங்கில், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் மேலாளர்கள், மாவட்டத் தொழில் மைய அலுவலர், தாட்கோ, மாவட்ட தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டு முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கடனுதவித் திட்டங்கள் மற்றும் மறு வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்து விளக்குகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், முன்னாள் படை வீரர்களைச் சார்ந்த விதவையர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.