வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஒன்றியக் கிராமங்களில் நீர் ஆதாரங்கள், நிலத்தடி நீர்மட்டம் உள்ளிட்டவை குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சீயமங்கலம், அருந்தோடு, சித்தருகாவூர், தென்தின்னலூர் ஆகிய கிராமங்களில் மத்திய ஜல் சக்தி அபியான் திட்ட துணைச் செயலர் டி.கே.டி.ராவ், தொழில்நுட்ப வல்லுநர் முகேஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தக் கிராமங்களில் உள்ள காங்கிரீட் தடுப்பணைகள், கசிவுநீர் குட்டைகள், கிணறுகள் உள்ளிட்டவற்றை அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர ஊராட்சிகள்தோறும் மரக்கன்றுகள் நட அவர்கள் ஆலோசனை வழங்கினர். தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் ப.பரணிதரன், பொறியாளர் செல்வராஜ் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடன் சென்றனர்.