விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்: 130 பேர் கைது
By DIN | Published On : 19th July 2019 02:19 AM | Last Updated : 19th July 2019 02:19 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் தடையை மீறி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 130 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை -சேலம் இடையிலான 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதால் பாதிக்கப்படும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரின் தடையையும் மீறி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமையில் 7 பெண் விவசாயிகள் உள்பட 130 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.