திருவண்ணாமலை, வேட்டவலம் பகுதிகளில் சாலை விதிகளை மீறியதாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை, காமராஜர் சிலை, வேட்டவலம் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டியதாக திருவண்ணாமலையை அடுத்த சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமம் ரஞ்சித் (21), கலசம்பாடி கிராமம் ஏழுமலை (27), ஆடையூர் கிராமம் ராஜா (37), திருவண்ணாமலை பே கோபுரத் தெரு ராஜா (39), வேட்டவலத்தை அடுத்த கீழ்கரிப்பூர் கிராமம் மணிகண்டன் (25), காட்டுமலையனூர் கிராமம் சரண்ராஜ் (26), மாணிக்கம் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், செல்லிடப்பேசியில் பேசியபடியே வாகனங்களை ஓட்டி வந்ததாக திருவண்ணாமலை துராபலி தெருவைச் சேர்ந்த நரேந்திரன் (27), சோமவாரகுளத் தெரு மணிகண்டன் (35) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக சாலை விதிகளை மீறியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.