ஆரணியை அடுத்த சேவூரில் புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
சேவூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து, பள்ளிக் கட்டடம் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று நிறைவடைந்தன. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காலை காணொலிக் காட்சி மூலம் பள்ளி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
அதேவேளையில், இந்த புதிய பள்ளிக் கட்டடத்தில் அதிமுக ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர் தலைமையில் குத்துவிளக்கேற்றி, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, அதிமுக ஆரணி நகரச் செயலர் எ.அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஊராட்சித் தலைவர் பெருமாள், கிளைச் செயலர் பாலசந்தர், மாணவரணி நிர்வாகி குமரன், நிர்வாகிகள் சரவணன், பையூர் சதீஷ், ஆரணி மாவட்டக் கல்வி அலுவலர் சம்பத், ஆய்வாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.