செய்யாறு சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த கட்டணக் கழிப்பிடத்தை இலவச பொது கழிப்பிடமாக மாற்றி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி எல்லைக்கு உள்பட்ட15-வது வார்டில் காமராஜர் நகர் பகுதியில் (சந்தைப் பகுதி) நகராட்சிக்குச் சொந்தமான பொது கழிப்பிடம் உள்ளது. இந்தக் கழிப்பிடத்தில் பவளம் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்தக் கழிப்பிடத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, இதை இலவச பொது கழிப்பிடமாக மாற்றித்தரக் கோரி, அந்தப் பகுதி மக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.
அதன்பேரில், நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், காமராஜர் நகர் பகுதியில் பவளம் மகளிர் சுயஉதவிக் குழு மூலம் பராமரிக்கப்பட்டு வந்த கட்டணக் கழிப்பிடத்தை இலவச பொது கழிப்பிடமாக மாற்றி வியாழக்கிழமை உத்தரவிட்டார். இந்த இலவச பொது கழிப்பிடம் நகராட்சிப் பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது.