தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் பதில் தராவிட்டால் பொதுத்தகவல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் இரா. பிரதாப்குமார் கூறினார்.
தமிழ்நாடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் 2-ஆவது மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜி.வனிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சு.ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தகவல் ஆணையர் இரா.பிரதாப்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, மாவட்டத்தில் உள்ள பொதுத்தகவல் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பல்வேறு சட்டப் பிரிவுகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், 20 மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் நேரடி விசாரணை மேற்கொண்டார். பொதுமக்களிடம் இருந்து புதிய மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். இந்த விசாரணையில், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக பொதுத் தகவல் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை, செங்கம் கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, வெம்பாக்கம், கலசப்பாக்கம், வந்தவாசி உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களின் பொதுத் தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வுக் கூட்டம்: தொடர்ந்து, தகவல் ஆணையர் தலைமையில் அரசுத் துறைகளைச் சேர்ந்த பொதுத் தகவல் அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாநில தகவல் ஆணையர் இரா.பிரதாப்குமார், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.