வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகியவை சார்பில் தூய்மை பாரத கோடைகால உள்பயிற்சி சேவைப் பணி முகாம் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவுக்கு கல்லூரிச் செயலர் எம்.ரமணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ்.மைதிலி முன்னிலை வகித்தார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே.வரலட்சுமி வரவேற்றார். வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) மு.பாஸ்கரன் முகாமை தொடக்கிவைத்துப் பேசினார்.
விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெ.காவேரி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.தர்மதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஈ.கலைவாணி நன்றி கூறினார்.
முகாமையொட்டி அந்தக் கிராமத்தில் தூய்மைப் பணி, பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கல்லூரி மாணவிகள் மேற்கொள்கின்றனர்.
இந்த முகாம் ஜூன் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.