வந்தவாசி அருகே திருமணமாகி 15 மாதங்களே ஆன புதுப்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசியை அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் ராஜேஷ்குமார் (25). இவரும் இதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் (21) காதலித்து கடந்த 15 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த மே 28-ஆம் தேதி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீவைத்துக் கொண்டாராம். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஐஸ்வர்யாவின் தந்தை பழனி அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
மேலும், திருமணமாகி 15 மாதங்களிலேயே ஐஸ்வர்யா இறந்துள்ளதால் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அன்னம்மாள்
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.