செங்கத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பகுதியில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிலைகளுக்கு பீடம் அமைப்பதற்காக வைத்திருந்த மரக் கட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் செல்வக்குமார் (35) என்பவர் விநாயகர் சிலை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர், சிலை செய்வதற்காக பல்வேறு ரசாயனக் கலவைகளை அந்தப் பகுதியில் தீ மூட்டி கொதிக்க வைத்து சிலைகளை உருவாக்குவார்.
அதேபோல, வியாழக்கிழமை ரசாயனக் கலவையை கொதிக்க வைத்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், விநாயகர் சிலைகளுக்கு பீடம் அமைக்க வைத்திருந்த மரக் கட்டைகளில் தீ மளமளவென பரவியது. தகவலறிந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால், அருகிலிருந்த மற்ற பொருள்கள், தனியார் செல்லிடப்பேசி கோபுரம் ஆகியவை தீ விபத்திலிருந்து தப்பின.