தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தானிப்பாடி பகுதி வன அலுவலர் பாலு தலைமையிலான வனத்துறையினர் தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்தூர் காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, காட்டில் சந்தேகப்படும்படி பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், சவரியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ்(29), அமலதாஸ் (29), மரியா செல்வம் (28) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலித்தனர்.