குடிநீர் பிர்ச்னையைத் தீர்க்காத அதிமுக அரசைக் கண்டித்து, ஆரணியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது அவர், அதிமுக அரசு தமிழக மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியாத அரசைக் கண்டித்தும், நகராட்சிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யாததைக் கண்டித்தும், நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருள்களும் வழங்குவதில்லை, முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி, உண்மையான பயனாளிகளுக்கு வரும் முதியோர் உதவித்தொகையை தடுப்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் பங்கேற்றனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட பொருளாளர் கே.ஆர்.சீதாபதி, முன்னாள் எம்எல்ஏக்கள் எ.ராஜேந்திரன், வ.அன்பழகன், ந.பாண்டுரங்கன், மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன், தயாநிதி, ஆர்.எஸ்.பாபு, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏ.சி.மணி, அன்பழகன், தட்சிணாமூர்த்தி, வெள்ளைகணேசன், மனோகரன், ராமசாமி, விண்ணமங்கலம் ரவி, கப்பல் கங்காதரன், கே.டி.ராஜேந்திரன், என்.நரேஷ்குமார், வழக்குரைஞர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.