மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில் உள்ள பைரோஸ்கான் திடலில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜமால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் நசீர் அஹமத், கலிமுல்லா, மாவட்டப் பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணைத் தலைவர் முகமது ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேத்துப்பட்டு நகரத் தலைவர் அக்பர் வரவேற்றார். கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் எழுத்தாளர் மதிமாறன், பழனி பாரூக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சி பாடுபடும் என்றார்.
கூட்டத்தில் நகரத் தலைவர்கள் செய்யாறு கமால், ஆரணி முபாரக், வந்தவாசி அக்பர், திருவண்ணாமலை நாசர் உசேன், ஒன்றியத் தலைவர்கள் செய்யாறு ஜஹாங்கீர், ஆரணி குடு பாஷா, வந்தவாசி அமானுல்லா, திருவண்ணாமலை சாகுல் அமீது, செங்கம் நகரத் தலைவர் தௌலத் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு நகரச் செயலர் முபாரக் நன்றி கூறினார்.