கீழ்பென்னாத்தூரில் அரசு சுவர்களில் அரசியல் கட்சியினர் விளம்பரங்களை எழுதினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆய்வாளர் எச்சரித்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து காவல் ஆய்வாளர் ராஜா பேசியதாவது:
தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் கட்சியினர் உரிய அனுமதி பெற்றுதான் நடத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.
அரசு சுவர்களில் அரசியல் விளம்பரங்களை எழுதக் கூடாது. தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் கட்டட உரிமையாளர்களின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் எழுதிக் கொள்ளலாம். விளம்பரப் பதாகைகளை முன் அனுமதி பெற்று அதற்கான கட்டணத் தொகையை செலுத்திவிட்டு வைக்க வேண்டும். பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சி.கே.அன்பு, நாகராஜ், ராஜாமணி, கஜேந்திரன், ஏழுமலை, குமார் (எ) கிருஷ்ணராஜ், சரவணன், வடிவேல், வேல்முருகன், கனகராஜ், கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.