ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் 63-ஆம் ஆண்டு மாடு விடும் விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதில், தருமபுரி, அரக்கோணம், கடப்பா, சித்தூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250 காளைகள் பங்கேற்றன.
வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், முதல் பரிசாக வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த தமிழின் காளைக்கு ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசாக வேலூர் மாவட்டம், பரதராமி கிராமத்தைச் சேர்நத ரமேஷின் காளைக்கு ரூ.60 ஆயிரமும், மூன்றாவது பரிசாக கடலூரைச் சேர்ந்த ராஜாவின் காளைக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன. மேலும், அதி வேகமாக ஓடிய 51 காளைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
10 பேர் காயம்: இந்த விழாவில் காளைகள் முட்டியதில் ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பாரதி, கீழ்நகர் விஜயகுமார், அரியப்பாடி தமிழரசன், கத்திவாடி அஜித்குமார், வெள்ளூர் கார்த்திகேயன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.