திருவண்ணாமலை அருகே பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில், மரத்தில் தண்ணீர் பந்தல் அமைத்த மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலையை அடுத்த நரியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 77 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவி கு.சர்மிளா, தனது வீடு, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் கோடை காலத்தில் பறவைகள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார்.
இதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர் வெ.சரவணன், ஆசிரியர்கள் ஆனந்தகுமார், பழனிமுருகன், சாந்தி, கலா, மணிமேகலை ஆகியோர் மாணவி கு.சர்மிளாவைப் பாராட்டி சனிக்கிழமை பரிசு வழங்கினர்.