பொறியியல் துறை மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் காத்துள்ளன என்று பெங்களூரு தேசிய வானியல் ஆய்வக நிறுவன விஞ்ஞானி வெங்கடேஷ்வரலு கரோடி கூறினார்.
திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியில் லீடர் 2019 என்ற சர்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரிப் பதிவாளர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார்.
பெங்களூரு தேசிய வானியல் ஆய்வக நிறுவன விஞ்ஞானி வெங்கடேஷ்வரலு கரோடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் இயந்திரவியல், உலோகவியல் பொறியியல் துறை மாணவர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள், எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த வேலைவாய்ப்புகளைப் பெற மாணவர்கள் தங்களது தனித்திறமைகள், பாட அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து, மற்றொரு சிறப்பு அழைப்பாளரான அசோக் லே லாண்ட் பொது மேலாளர் வேல்முருகன், தேசிய தகவல் மையத்தின் மேலாளர் நளினி, பேராசிரியர் பாஸ்கர் ஆகியோரும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினர்.
மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
மாநாட்டில், கல்லூரி முதல்வர் ஆர்.ரவிச்சந்திரன், கணிப்பொறியியல் துறைத் தலைவர் மோகனரங்கன், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.