வந்தவாசி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து வந்தவாசியில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஜான்சன்(45). கடந்த 2016-ஆம் ஆண்டு இதே முகாமைச் சேர்ந்த தினேஷ்வரன்(28) என்பவர் முன்விரோதம் காரணமாக ஜான்சனை கத்தியால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த ஜான்சன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஜான்சன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் தினேஷ்வரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வந்தவாசியில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தினேஷ்வரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி க.நிலவரசன் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து தினேஷ்வரன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.